கி.பி. 940ல் முதற் பராந்தகனின் நம்பிக்கையுடைய நண்பனும் அவன்
ஆட்சிக்குட்பட்டவனுமான கங்கமன்னன் இரண்டாம் பிரதிவீபதி மரணம் அடைந்தான். இதுவே கங்க நாட்டிலிருந்து, பராந்தகனுக்கு ஏற்பட்ட தொல்லைகளின் தொடக்கமாக இருந்தது, பிரதிவீபதி தனது மகன் விக்கியண்ணனை இழந்திருந்தான். இரண்டாம் பூதகன் என்பவன் இராஷ்டிரகூட இளவரசியும் மூன்றாம் கிருஷ்ணனின் சகோதரியுமான ரேவகா என்பவளை மணந்தான். இவன் கங்க நாட்டின் தனிப்பெரும் தலைவனாக விளங்கினான். சோழர்களின் வலிமையைக்கண்டு அஞ்சிய வாணர்களும் வைதும்பரர்களும் ஏற்கனவே கிருஷ்ணனுடைய பாதுகாப்பைக்
கோரியிருந்ததோடு, சோழருக்கு எதிராகவும் அவனது உதவியைப் பெற விழைந்தனர். இச்சூழ்நிலையில், தன் நாட்டில் ஏற்பட்ட எதிர்ப்புகள் அனைத்தையும் அழித்துப் புகழேணியில் இருந்த கிருஷ்ணன்(இராஷ்டிரகூட மன்னன்) தெற்கு நோக்கித் தன் நாட்டை மேலும் விரிக்கக்கூடிய அரியவாய்ப்பை நழுவவிட விரும்பாமல் சோழருக்கு எதிராகப் படையெடுத்தான்.இப்போரில் சோழர்கள் வென்றனர்
.
கண்டராதித்தர் - கி.பி. 949/50-957
இடைக்காலச் சோழ மன்னர்களில் முதலாம் பராந்தகனுக்குப் பின்னர் பட்டஞ் சூட்டிக்கொண்டவர்
கண்டராதித்தர். இவர் கி.பி 950 தொடக்கம் 955 வரையுமே சோழ நாட்டை ஆண்டார். முதலாம் பராந்தக சோழன் காலத்திலேயே சோழநாட்டின் வடக்கே இராஷ்டிரகூடர்கள்பலமடைந்து இருந்தனர். கண்டராதித்தரின் ஆட்சியின்போது அவர்கள் தஞ்சைக்கு
முன்னேறி அதனைத் தாக்கி அழித்தனர். சோழர்கள் பலமிழந்திருந்த இச்
சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அதுவரை சோழருக்குக் கீழ்ப்பட்டுத் திறை
செலுத்தி வந்த பாண்டிய நாடும் சோழர் மேலாதிக்கத்தை உதறினர். பலமுறை
முயன்றும் சோழநாட்டின் எல்லைகள் குறுகுவதைக் கண்டராதித்தரால் தடுக்க
முடியவில்லை.கண்டராதித்தரின் மறைவுக்குப் பின்னர் அவரது தம்பியான அரிஞ்சய சோழன் பட்டத்துக்கு வந்தான்.
சுந்தர சோழன் -
கி.பி. 956-973
இடைக்காலச் சோழர்களில் பலம் வாய்ந்த அரசர்களில் ஒருவனாக விளங்கியவன்
சுந்தர சோழன். இவன் கி.பி 957 முதல் 973 வரை 16 ஆண்டுகள் சோழ நாட்டைஆண்டான். தனது முன்னோர் காலத்தில் இழந்த நிலப்பகுதிகளை மீட்டுச் சோழ நாட்டை வலிமையுள்ள நாடாக மாற்றியவன் இவன். தெற்கே திறை செலுத்த மறுத்துவந்த பாண்டிநாட்டின் மீது படை நடத்தி வெற்றிகண்டான். வடக்கிலும் இராஷ்டிரகூடர்களிடம் இழந்த பகுதிகளைக் கைப்பற்றும் பொருட்டு அவர்களுடன் போரிட்டு அவற்றை மீண்டும் சோழ நாட்டின் ஆளுகைக்கு உட்படுத்தினான்.
சுந்தரசோழனுக்குப் பின் கண்டராதித்த சோழனின் மகனான உத்தம சோழன்சோழ நாட்டுக்கு அரசனானான்.சுந்தர சோழனின் மகன்
அருள்மொழி வர்மன் பின்னாளில் ராஜராஜ சோழன் என்ற பெயரில் அரசபட்டம் ஏற்று மகத்தான மாமன்னனாகத் திகழ்ந்தான்.
உத்தம சோழன் - கி.பி. 970-985
கண்டராதித்த சோழனின் மகனாவான். கண்டராதித்தன் இறந்ததும் முறைப்படி பதவிக்கு வரவேண்டிய இவன் பதவிக்கு வரவில்லை, பதிலாக இரண்டாம் பராந்தகன்என அழைக்கப்பட்ட சுந்தர சோழன் பதவிக்கு வந்தான். 16 ஆண்டுகள் ஆட்சிபுரிந்த பராந்தகனின் இறப்புக்குப் பின் உத்தம சோழனுக்கு ஆட்சி கிட்டியது.இவன் 12 ஆண்டுகள் சோழநாட்டை ஆட்சி புரிந்தான். இவன் சிறந்த முறையில்நாட்டை ஆட்சி செய்ததாகத் தெரிகிறது. இவனைத் தொடர்ந்தே புகழ் பெற்ற சோழஅரசன் இராஜராஜ சோழன் அரியணை ஏறினான்.
முதலாம் இராஜராஜ சோழன் - கி.பி. 985-1014
சோழர்களின்புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவான். 'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1012 வரையாகும். ராஜராஜன் சுந்தர சோழனுடைய இரண்டாவது மகனாவான். சுந்தர சோழனுக்கும் சேர நாட்டு வானவன் மாதேவிக்கும் பிறந்த இவனது இயற்பெயர் "அருண்மொழிவர்மன்". இராஜகேசரி அருள்மொழிவர்மன் என்ற பெயராலேயே தன் ஆட்சியின் தொடக்க காலத்தில் அழைக்கப்பட்டான். இவன் ஆட்சியின் 3ம் ஆண்டு முதலே ராஜ ராஜ சோழன் எனப்பட்டான் (988) தந்தை இறந்ததும் இவன் உடனடியாகப் பதவிக்கு வரவில்லை. 12வருடகால உத்தம சோழனின் ஆட்சிக்குப் பின்னரே இவன் ஆட்சிப் பொறுப்பைஏற்றுக்கொண்டான். விசயாலய சோழன் நிறுவிய சோழ அரசு இவன் காலத்திலும் இவன் மகன் இராஜேந்திர சோழன் காலத்திலும் மிக உயர்நிலை எய்தியது. இவன் மகன் முதலாம் இராசேந்திரன் காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவச் செய்யும் பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னனே. இராஜராஜ சோழனின் முப்பதாண்டு ஆட்சிக்காலமே சோழப் பேரரசின் வரலாற்றில் மிக முக்கியமாக விளங்கியது. ஆட்சி முறை, இராணுவம், நுண்கலை,கட்டடக்கலை, சமயம், இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளில் புதிய எழுச்சியைக்கண்ட சோழப்பேரரசின் கொள்கைகளை இவனுடைய ஆட்சியில் உருப்பெற்றவையே.
சோழர்களின் மெய்க் கீர்த்திகள
தன் ஆட்சியில் நிகழ்ந்த வரலாற்று உண்மைகளை அதிகாரப் பூர்வமாகத் தெரிவித்து நன்கு விளக்கும் மெய்க்கீர்த்திகளை இனிய தமிழ் அகவற்பாவில் தன் கல்வெட்டுகளின் தொடக்கத்தில் பொறிக்கும் வழக்கத்தை உண்டாக்கியவன் இராஜராஜ சோழனே.
இவனுக்குப் பிறகு இவன் வழி வந்த சோழ மன்னர்கள் அனைவரும் இந்தப் பழக்கத்தைப் பின்பற்றினர். இவன் மகன் முதலாம் இராஜேந்திரனின்
ஆட்சித் தொடக்கத்தில் குறைந்த அளவிளான மெய்க்கீர்த்தி, நாளடைவில் விரிந்து அவ்வப்போது நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் தன்னுள் சேர்த்துக் கொண்டது. சோழர் கல்வெட்டுக்களில் காணப்படும் இத்தகைய வரலாற்று முன்னுரைகள், ஒவ்வொரு மன்னனுடைய ஆட்சிக் காலத்திலும் நடைபெற்ற நிகழ்ச்சிகளை அறியவும்,கல்வெட்டுகள் எந்தெந்த மன்னர்களுடையவை என்பதை அறியவும் பெரிதும்உதவுகின்றன.
இராஜராஜனின் மெய்க் கீர்த்திகள்
சிலஅரசர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மெய்க் கீர்த்திகளை உடையவராக இருந்தனர் முதலாம் இராஜராஜன் மூன்று வித மெய்க்கீர்த்திகளை கையாண்டாலும் 'திருமகள் போல' என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியையே எட்டாம் ஆண்டிலிருந்து பெரும் அளவில் பயன்படுத்தப்பட்டது. இவ்வகை மெய்க்கீர்த்தி இவனது ஆட்சியில் நடைபெற்ற முதற்போரைக் குறிக்கும் வகையில், 'காந்தளூர்ச்சாலை கலமறுத்த' என்ற பட்டத்தைக் குறிப்பிடுகிறது.
இரண்டாம் வகையான மெய்க் கீர்த்தியிலும் காந்தளூர்ச்சாலை வெற்றிக்கே முதலிடம் அளிக்கப்பட்டுள்ளது. இவனது 20ம் ஆண்டைச் சேர்ந்த மூன்றாம் வகை மெய்க்கீர்த்தியில் இராஜராஜன் மதுரையை அழித்தான் என்றும். கொல்லம், கொல்ல தேசம், கொடுங்கோளூர் ஆகிய நாட்டு
மன்னர்களை வெற்றி கொண்டான் என்றும் கடல் கடந்த பகுதிகளின் மன்னர்கள் அவனுடைய பரிவாரமாகப் பணிபுரிந்தனர் என்றூம் கூறுகிறது.
போர்கள்
கேரளப் போர்
இராஜராஜன் தன் ஆட்சியின் தொடக்கத்திலேயே மும்முடிச் சோழன் என்ற பட்டம் பெற்றான்.
இவன் ஆட்சிக் காலத்தில் முதற்போர் கேரள நாட்டுடன் நடந்தது, இப்போரின்
விளைவைப் பற்றி இம்மன்னனது நான்காம் ஆண்டு முதலாகக்கல்வெட்டுக்களில்
காணப்படும், 'காந்தளூர்ச் சாலை கலமறுத்த' என்ற பட்டத்தால்
விளக்கப்பட்டுள்ளது. இப்பட்டம் இராஜராஜனின் நான்காம் ஆண்டு கல்வெட்டிலேயே காணப்பட்டாலும், எட்டாம் ஆண்டிற்கு முற்பட்ட கல்வெட்டுகள் கேரளத்திலும், பாண்டிய நாட்டிலும் காணப்படவில்லை என்பதால் வெற்றி கொண்ட பகுதியைத் தன்நேரடி ஆட்சியின் கீழ்க் கொண்டுவர சில ஆண்டுகள் பிடித்திருக்கலாம் என்று
தெரிகிறது.
இம்மன்னனின் வெற்றி பற்றித் தெளிவாகக் கூறும் திருவாலங்காட்டுப் பட்டயங்கள், இவன் முதன் முதலில் தென் திசையிலேயே தன் வெற்றியை நிலை நாட்டினான் என்று கூறுகிறது.
பாண்டிய மன்னன் அமரபுஜங்கனை சிறைபிடித்தான் என்று இக்குறிப்பு கூறுகிறது
இம்மன்னனின் தென் திசைப் போரில் பாண்டியர், சேரர் இருவரையுமே எதிர்க்க வேண்டியிருந்தது. அப்போது சேர மன்னனாக இருந்தவன் பாஸ்கர ரவிவர்மன் திருவடி
இலங்கை படையெடுப்பு
இராஜராஜனால்வென்று கைப்பற்றப்பட்ட நாடுகளுள் இலங்கையும் ஒன்று என்பதை இம்மன்னனது 'திருமகள் போல' என்று தொடங்கும் கி.பி. 993ம் ஆண்டு மெய்க்கீர்த்தியால்அறியலாம்.இப்படையெடுப்பின்
பொழுது இலங்கையை ஆட்சி புரிந்து கொண்டிருந்தவன், ஐந்தாம் மகிந்தன் என்பவனாவான். முதலாம் இராஜேந்திரனின் தலைமையில் சோழப்படை இம் மன்னனைவென்றது
ராஜேந்திர சோழன்
- இராஜராஜ சோழனின் படையில் பட்டத்து இளவரசனாக இராஜேந்திர சோழன் கி.பி. 1002 ல் பங்கேற்றதில் இருந்தே தொடங்கியது இவரது வரலாறு . இதில் மிகவும் முக்கியமானவை இராஷ்ட்டிரகூடர்களுக்கு எதிரான இராஜராஜனின் போரும் மற்றும் சாளுக்கிய அரசன் சத்யாச்சிரயனுக்கு எதிரானபோரும். இதில் சாளுக்கிய அரசனுக்கு எதிரான போரில் இராஜேந்திரன் துங்கபத்திரா ஆற்றைக் கடந்து சாளுக்கிய நாட்டின் தலைநகர் வரை படையெடுத்துச் சென்று வெற்றிபெற்றதும் ஆகும்
இலங்கை மீதான படையெடுப்பு
முதலாம் இராஜராஜ சோழன் தொடங்கி வைத்த இலங்கை மீதான படையெடுப்பை நிறைவு செய்யும் விதமாகவும், பராந்தக சோழன் காலத்திலேயே தேடப்பட்டு கண்டறியமுடியாமல் போன, பாண்டிய
அரசர்களால் ஈழத்து அரசர்களிடம் கொடுத்து வைக்கப்பட்டதாகச் சொல்லப்படும்இந்திரன் பாண்டியர்களுக்கு அளித்த இரத்தினக்
கற்கள் பொறித்த வாளையும் முத்து மாலையையும் கண்டறியும் விதமாகவும்
ஈழத்தின் மீது கி.பி. 1018ல் இந்தப் படையெடுப்பு நடத்தப்பட்டது.
படையெடுப்பு பெரும் வெற்றி பெற்று இராஜேந்திரன் ஈழநாட்டு பட்டத்து அரசன், அரசி, இளவரசியை சிறைகொண்டு சோழதேசம் வந்தான். ஈழ அரசன்
ஐந்தாம் மஹிந்தா பன்னிரெண்டு ஆண்டுகால சிறைவாசத்துக்குப் பிறகு சிறையிலேயே இறந்து போனான்.
பாண்டியர்கள் மற்றும் சேரர்களுக்கு எதிரான படையெடுப்பு
ஈழப்படையெடுப்பைத் தொடர்ந்து பாண்டியர்களுக்கும் சேரர்களுக்கும் எதிரான படையெடுப்பை இராஜேந்திரன் கி.பி. 1018ல் மேற்கொண்டான். இதை இம்மன்னனின் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் உறுதி செய்கின்றன.
இராஜேந்திரன் தன்னுடைய மகன்களின் ஒருவனை ஜடாவர்மன் சுந்தர சோழ-பாண்டியனாக பாண்டிய நாட்டில் முடிசூட்டி மதுரையில் இருந்து ஆளும்படி செய்தான். ஆனால் இந்த சோழ-பாண்டியன் இராஜேந்திரனின் எந்த மகன் என்பது தெளிவாக குறிப்பிடப்பட
இல்லை.
சாளுக்கிய படையெடுப்பு
இராஜேந்திரன் கி.பி. 1021 ல் தன்னுடைய கவனத்தை மேலைச் சாளுக்கியர்களை நோக்கித் திருப்பினான். இதற்கு கி.பி. 1015ல் சத்யாச்சிரயனுக்குப் பிறகு மேலைச் சாளுக்கிய மன்னனாக முடிசூடிய ஜெயசிம்மன் II பொறுப்பேற்றதும், சத்யாச்சிரயன் சோழர்களிடம் இழந்த சாளுக்கிய பகுதிகளை தன்வசப்படுத்தத் தொடங்கியது காரணமாகயிருந்தது. இராஜேந்திரன் ஈழத்திலும் பாண்டியர், சேரர்களுக்கு எதிரான போர்களில் தன் கவனத்தைச் செலுத்தியிருந்த பொழுது வடதிசையில் இந்தத் திருப்பம் நிகழ்ந்திருந்தது. சாளுக்கிய மன்னன் ஜெயசிம்மன் II இந்த முயற்சிகளில் ஆரம்ப காலத்தில் வெற்றியும் பெற்றிருந்தான்.
இடைப்பட்ட இந்தக் காலத்தில் ஜெயசிம்மன் கீழைச் சாளுக்கிய தேசமான வேங்கியிலும் தன்னுடைய ஆளுமையைச் செலுத்தினான். கீழைச் சாளுக்கிய மன்னனான விமலாதித்தனின் மரணத்திற்குப் பிறகு பட்டத்திற்கான குடும்பப் பூசலில், ஜெயசிம்மன் விஜயாதித்தனை VII ஆதரித்து குடும்பப் பூசலை வளர்த்தான். விமலாதித்தனின் மற்றொரு மகனான இராஜராஜ நரேந்திரனுக்கும் விஜயாதித்தனுக்கும் இடையேயான
சண்டையில் இராஜேந்திரன் இராஜராஜ நரேந்திரனை ஆதரித்தான் - இவன்
ஒருவகையில் இராஜேந்திரனின் மருமகன் ஆவான். இராஜராஜ நரேந்திரன்,
விமலாதித்தனுக்கும் இராஜராஜ சோழனின் மகளான அதாவது இராஜேந்திரனின் தங்கை குந்தவைக்கும்
(இராஜராஜ சோழரின் தமக்கை குந்தவை வேறு நபர்.) பிறந்தவன் ஆவான்.
இதன் காரணமாக ஏற்பட்ட உள்நாட்டுச் சண்டையில் இராஜராஜ நரேந்திரன் இராஜேந்திரனின் உதவியால் சுலபமாக வென்றான். ஜெயசிம்மனுடனான போரில் இராஜேந்திரன் வென்றான் ஆனால் ஜெயசிம்மனை துங்கபத்திரா ஆற்றின் நதிக்கரைக்கு அப்பால் மட்டுமே விரட்டினான். ஜெயசிம்மனைத் தொடர்ந்து சாளுக்கியத் தலைநகரம் வரை செல்லவில்லை. இராஜேந்திரன் தன்னுடைய மகளான அம்மங்கா தேவியை இராஜராஜ
நரேந்திரனுக்கு கி.பி. 1022ல் மணம்முடித்து சாளுக்கிய அரசியலில் தொடர்ந்து
சோழர்களின் பங்கு இருக்குமாறு செய்தான். பின்னர் மீண்டும் ஜெயசிம்மன்
கி.பி. 1031ல் வேங்கி மீது படையெடுத்து விஜயாதித்தனை கீழைச் சாளுக்கிய
மன்னராக்கினான் இதன் காரணாம மீண்டும் ஒரு முறை இராஜேந்திரன் வேங்கி மீது படையெடுத்து கி.பி.1035ல் விஜயாதித்தனையும் அவனுடைய மேலைச் சாளுக்கிய ஆதரவான ஜெயசிம்மனின் படைகளையும் வேங்கியில் இருந்து துரத்திவிட்டு மீண்டும் இராஜராஜ நரசிம்மனை வேங்கி மன்னனாக அறிவித்தான்.
கங்கையை நோக்கிய படையெடுப்பு
மேலை கீழைச் சாளுக்கிய தேசங்களிளும் ஈழம் பாண்டிய சேர தேசங்களிலும் கிடைத்த தொடர்ச்சியான வெற்றியும், அதன் காரணமாக இல்லாமல் போயிருந்த சோழ நாட்டிற்கெதிரான கிளர்ச்சிகளும் கலகங்களும் இராஜேந்திரனை கங்கை நோக்கிய படையெடுப்பை நடத்த வைத்த காரணிகளாகயிருந்தன. கி.பி 1019ல் இராஜேந்திரனின்
படை கங்கையை நோக்கிய தன்னுடைய படையெடுப்பைத் தொடங்கியது. கோதாவரி கரையில் இராஜேந்திர சோழன் கங்கை நோக்கிய தன் படைகளின் படையெடுப்பிற்கான பாதுகாப்பிற்காக நின்றான். சோழர் படைகள் வங்கதேசத்தின் பால வமிசத்து புகழ்பெற்ற மன்னனான
மகிபாலனை எதிர்த்து
பெரும் வெற்றிபெற்றது.
திருவாலங்காட்டுச் செப்பேடுகள் இந்த இராஜேந்திரனின் கங்கை நோக்கிய படையெடுப்பு ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் நீடித்தன என்று சொல்கின்றன. இந்த இரண்டு ஆண்டு காலத்தில்
வட இந்தியாவின் அரசுகள் சோழர்களின் பெரும்படைக்கு முன் தோல்வியுற்றன;
ரனசுராவின் படைகளை வென்று தர்மபாலாவின் நாட்டிற்குள் நுழைந்தன என்றும் அங்கே அம்மன்னனை வென்று கங்கை வரை சென்றதாகவும். தோல்வியுற்ற மன்னர்கள் மூலமாகவே கங்கை நதியை சோழநாட்டுக்கு எடுத்து வந்தான் என்றும் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியமுடிகிறது.
கடாரம் படையெடுப்பு
இராஜராஜனின் ஆட்சியின்
14வது ஆண்டுக் கல்வெட்டுகளில், முதல் முறையாக, கடல் கடந்து கடாரம் கொண்ட செய்தி காணப்படுகிறது. இதைத் தெரிவிக்கும் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கடலைக் கடந்து திறமையான படையுடன் இராஜேந்திரன் சென்று கடாஹ என்னும் பகுதியைக் கைப்பற்றினான் என்று சுருக்கமாக ஒரு செய்யுளில் சில
வரிகளில் கூறிமுடிக்கிறது என்றாலும் இந்தச் சாதனையை இவனுடைய தமிழ்
மெய்க்கீர்த்தி மிக விரிவாகச் சொல்கிறது.
கி.பி. 1025ல் சோழர்களின் கப்பற்படை சங்கராம விஜயதுங்கவர்மன் ஆண்ட ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தை நோக்கிய போரைத் தொடங்கியது. ஸ்ரீவிஜயத்தின் படைவலிமை பெற்ற கடாரத்தையும் தாக்கி அழித்தது சோழர்களின் கப்பற்படை. சங்கராம விஜயதுங்கவர்மன் சைலேந்திர குலமன்னனான மார விஜயதுங்கவர்மனின் மகனாவான். ஆனால் இராஜேந்திரனின் இந்த ஸ்ரீவிஜயத்தின் மீதான கடற்படைத் தாக்குதல் என்ன காரணத்தால் நிகழ்ந்தது என்பதற்கு எந்த வரலாற்று ஆதாரமும் கிடைக்கவில்லை. ஏனென்றால் சைலேந்திர குல ஸ்ரீவிஜய மன்னர்களுக்கும் இராஜராஜ சோழனுக்கும் நல்ல நட்புறவு இருந்து வந்துள்ளது.
மார விஜயதுங்கவர்மன் மன்னன் தான் சூடாமணி விகாரத்தை நாகப்பட்டினத்தில் கட்டிக்கொடுத்தவன் இதற்கு இராஜராஜ சோழரின் முழு ஆதரவும் இருந்திருக்கிறது.
இராஜேந்திரனின் ஆதரவும் இருந்தது என்று கல்வெட்டு ஆதாரங்கள்
தெரிவிக்கின்றன; இதன் காரணமாகவே இராஜேந்திரனின் இந்த ஸ்ரீவிஜய
படையெடுப்பின் காரணம் என்ன என்பதில் குழப்பம் நீடிக்கிறது.
இராஜேந்திரன் ஆட்சியின் இறுதி ஆண்டுகள்கடாரம்படையெடுப்பிற்குப் பின் இராஜேந்திரன் இருபது ஆண்டுகள் ஆட்சி செய்தான்.போர் முதலியன நடவாத அமைதிக் காலம் என்று வரலாற்று ஆசிரியர்கள் இக்காலப் பகுதியை சிறப்பித்துள்ளனர்.
இராஜேந்திரன் ஆட்சியின் கடைசி ஆண்டுகள்ள், விஜயாலயச் சோழ வமிசத்தின் வரலாற்றின் பொற்காலமாக அமைந்தன. சோழ நாடு மிகப் பரந்து விரிந்தது; சோழருடைய பெரும் படையின் வல்லமையும் கடற்போரின் விளைவால் உண்டான மதிப்பும் வானோங்கி நின்றன.
விருதுகள்
ராஜேந்திரன் சிறந்த விருதுகள் பலவற்றைப் பெற்றிருந்தான் . இவற்றில் குறிப்பிடத்தக்கவை,முடிகொண்ட சோழன், பண்டித சோழன் என்பன.
இம்மன்னனே விரும்பி சிறந்த விருதாகக் கருதி ஏற்றது, 'கங்கை கொண்ட
சோழன்' என்பதாகும்.
புதல்வர்கள் இவன் புதல்வர்கள் மூவர் இராஜாதிராஜன், இராஜேந்திரன், வீர இராஜேந்திரன்
ஆகியோர் இராஜேந்திரனின் மகள் அருண்மொழி நங்கையார் இம்மன்னனின் மற்றோரு மகள் புகழ் மிக்க அம்மங்காதேவி ஆவாள். இவள் கீழைச் சாளுக்கிய மன்னன் முதலாம் இராஜராஜனின் மனைவியும், முதலாம் சாளுக்கிய மன்னர்களில், குலோத்துங்கனின் தாயும் ஆவாள்.
பின்வந்த சோழ மன்னர்கள்
இராஜேந்திர சோழனுக்குப் பின் 1044 ஆம் ஆண்டில் முதலாம் இராதிராஜன் அரசனானான். இவன் காலத்தில் சோழப் பேரரசின் தென் பகுதிகளான ஈழம், பாண்டிநாடு, சேரநாடு ஆகிய இடங்களில் கிளர்ச்சிகள் தீவிரம் அடையத் தொடங்கின எனினும், அவற்றை அவன் அடக்கினான். சாளுக்கியர்களில் தொல்லைகளை அடக்குவதற்காக அங்கேயும் சென்று
போர் புரிந்தான். சோழர்கள் இறுதி வெற்றியைப் பெற்றனராயினும்
கொப்பம்
என்னுமிடத்தில் நடைபெற்ற சண்டையொன்றில் இராசாதிராசன் இறந்துபோனான்.
முதலாம் இராதிராஜனைத் தொடர்ந்து, அவன் தம்பி இராசேந்திரன் என்னும் அரியணைப் பெயருடன் முடி சூட்டிக்கொண்டான். இவன் இரண்டாம் இராஜேந்திரன் எனப்படுகின்றான். இவனுக்குப் பின்னர் இவன் தம்பி வீரராஜேந்திரனும், பின்னர் அவன் மகனான அதிராஜேந்திரனும் வரிசையாகப் பதவிக்கு வந்தனர். அதிராஜேந்திரன் அரசனான சிலமாதங்களிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதாகச் சொல்லப்படுகின்றது. சந்ததி இல்லாமலேயே அதிராஜேந்திரன் இறந்து போனதால், சாளுக்கிய - சோழர்
மரபில் வந்த இளவரசன் ஒருவன் குலோத்துங்கன் என்னும் பெயருடன் சோழப்
பேரரசின் மன்னனானான். இது, பிற்காலச் சோழர் மரபுவழியை நிறுவிய விஜயாலய சோழனின் நேரடி வாரிசுகளின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
முதலாம் குலோத்துங்கன்
முதலாம் குலோத்துங்கனுடைய காலமும் பெரும் கிளர்ச்சிகளைக் கொண்ட காலப்பகுதியாகவே அமைந்தது. இலங்கையல்
விஜயபாகு என்பவன் சோழருடன் போரிட்டு ஈழத்திலிருந்து சோழர் ஆட்சியை அகற்றினான்.
சோழப் பேரரசின் வீழ்ச்சி
முதலாம் குலோத்துங்கனுக்குப் பின்னர் இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராஜராஜன், இரண்டாம் இராஜாதிராஜன், மூன்றாம் குலோத்துங்கன் ஆகியோர் வரிசையாகச் சோழ நாட்டை ஆண்டனர். இக்காலத்தில் சோழர் தொடர்ந்தும் வலிமையிழந்து வந்தனர்.
நாட்டின் வடக்கில் புதிய அரசுகள் வலிமை பெறலாயின. தெற்கே பாண்டியர்கள் வலிமை பெறலாயினர்.
1216 இல் ஆட்சிக்கு வந்த மூன்றாம் இராஜராஜன் காலத்தில் பாண்டியர்கள் கங்கைகொண்ட சோழபுரத்தின் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றிக் கொண்டனர். எனினும், சோழர்களுக்கு ஆதரவாகப் போசள மன்னனான இரண்டாம் நரசிம்மன் சோழநாட்டில் புகுந்து பாண்டியர்களைத் தோற்கடித்து மன்னனைக் காப்பாற்றினான். மூன்றாம் இராஜராஜனுக்குப் பின்னர் கி.பி 1246 இல் மூன்றாம் இராஜேந்திரன் மன்னனானான். இவன் காலத்தில் வலிமை பெற்ற பாண்டியர்கள் சோழர்களை வென்று அவர்களைச் சிற்றரசர்கள் நிலைக்குத் தாழ்த்தினர். மூன்றாம் இராஜராஜனுடன் பிற்காலச் சோழரின் பெருமை மங்கிப்போயிற்று.