ஜன. 20
அமெரிக்காவின் 44 ஆவது அதிபராக பராக் ஒபாமா பதவியேற்றுக் கொண்டார். கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஒருவர், அமெரிக்க அதிபராவது இதுவே முதல் முறை என்ற சரித்திர சிறப்பைப் பெற்றார்.
ஜன. 27
இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கொழும்பு பயணம் மேற்கொண்டார்.
மார்ச் 3
பாகிஸ்தானின் லாகூரில் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் சங்ககாரா, மெண்டிஸ் உள்பட இலங்கை கிரிக்கெட் வீரர்கள் 6 பேர் காயமடைந்தனர்.
மே.18
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் மரணமடைந்ததாக, இலங்கை அரசு தொலைக்காட்சி சேனல் தகவல் வெளியிட்டது.
மே 30
உலகில் 53 நாடுகளைச் 15,510 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, ஐக்கிய நாடுகளின் உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.
ஜூன் 1
பிரேசில் நாட்டில் இருந்து பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நோக்கி புறப்பட்டுச் சென்ற ஏர் - பிரான்ஸ் விமானம் அட்லாண்டிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 228 பேர் உயிரிழந்தனர்.
ஜூன் 25
உலகப் புகழ்பெற்ற பாப் இசைக் கலைஞர் மைக்கேல் ஜாக்சன் தனது 50வது வயதில் மரணமடைந்தார்.
ஆக. 6
விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலராகவும், அனைத்துலக உறவு விவகாரங்களுக்கான இயக்குனராகவும் செயல்பட்டு வந்த கே.பி. என்று அழைக்கப்படும் செல்வராஜா பத்மநாதன் கைது செய்யப்பட்டதாக, இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.
ஆக. 23
பஹாமஸ் நாட்டின் அட்லாண்டிஸ் பாரடைஸ் தீவில் நடந்த அழகிப் போட்டியில் 18 வயது வெனிசுலா நாட்டு அழகி ஸ்டெஃபானியா, 'மிஸ் யுனிவர்ஸ்' அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆக. 31
இலங்கைப் போர் நடவடிக்கைகளில் அரசை விமர்சித்து எழுதிவந்த இலங்கைத் தமிழ் பத்திரிகையாளர் ஜெயபிரகாஷ் திசநாயகத்துக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து இலங்கை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அக். 7
2009-ம் ஆண்டுக்கான வேதியியல் துறைக்கான நோபல் பரிசை தமிழரான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் வென்றார். அமெரிக்காவைச் சேர்ந்த தாமஸ் ஸ்டெயிட்ஸ், இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த அடா யோனாத் ஆகியோரும் இவருடன் பரிசை பகிர்ந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டது.
அக். 9
அணு ஆயுத குறைப்பு நடவடிக்கைக்கு முயற்சி மேற்கொண்டதற்காக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
அக். 17
புவி வெப்பமயமாதல் குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதற்காக, மாலத்தீவு நாட்டில் அமைச்சரவைக் கூட்டம் கடலுக்கு அடியில் நடத்தப்பட்டது.
நவ. 8
இலங்கையில் முப்படைகளின் தளபதி சரத் ஃபொன்சேகா தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.
நவ. 14
பிரதமரின் தூதுவராக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கொழும்பு சென்றார்.
நவ. 26
இலங்கை அதிபர் தேர்தலில் அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக முன்னாள் ராணுவ தளபதி சரத் ஃபொன்சேகாவை பொது வேட்பாளராக நிறுத்தப் போவதாக, எதிர்க்கட்சி தலைவர் ரனில் விக்கிரமசிங்கே அறிவித்தார்.
டிச. 18
புவிவெப்பமடைவதை தடுக்கும் நடவடிக்கையாக, டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் டிசம்பர் 7 ஆம் தேதி தொடங்கி 18 ஆம் தேதி வரை காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு நடைபெற்றது. மொத்தம் 113 நாட்டுத் தலைவர்களும் பிரதிநிதிகளும் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் குறிப்பிடத்தக்க உறுதியான முடிவுகள் எட்டப்படவில்லை.
டிச. 25
ஆப்கானிஸ்தானுக்கு கூடுதல் படைகளை அனுப்பப் போவதாக அமெரிக்கா அறிவித்திருந்த நிலையில், அமெரிக்காவுக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்தப்போவதாக தாலிபான் பயங்கரவாத அமைப்பு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment